வடக்கில் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை : ஜனாதிபதி செயலாளர் குற்றச்சாட்டு

0
453
North lake not developed

(North lake not developed)
யுத்தத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய குளங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவில்லை, சமகால நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு பதவியேற்றபின்னர் இதற்கான திட்டத்தை முன்னெடுத்தது என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின்பெணான்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கிராமசக்தி என்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாட்டில் சிறுசீரக நோய் நீண்டகாலமாகவே இருந்து வந்தது ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை உரிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. 2015ஆம் ஆண்டுக்கு பின்னரே இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிராமசக்தி என்ற கிராமத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வறுமையை ஒழித்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்த வேலைத்திம்டத்தின் முக்கியநோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசேட தேவைகளை கொண்டோர் மற்றும் ஊனமுற்றோரை மேம்படுத்துவதற்கான தேசியவேலைத்திட்டம், பாடசாலைகளுக்கான நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டம், சிறுவர்களை பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம், கிராமசக்தி அதாவது கிராம மக்களுக்கான தேசிய வேலைத்திட்டம், பொலன்னறுவை எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டம், சிறிசற பிவிசும என்ற மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம்,தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்,தேசிய விவசாய வர்த்தக வேலைத்திட்டம்,போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்,தேசிய கலாசார ஊக்குவிப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட தலைப்பின் கீழ் இந்த கிராம சக்தி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வகையில் வேறுபாடின்றி இந்த திட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதற்காக பல மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராமஉத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு அரச சார்பற்ற மற்றும் பொதுஅமைப்புக்களுக்கும் அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கம் கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதே ஆகும். தெரிவுசெய்யப்பட்ட 300 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

2020ஆம் ஆண்டளவில் 500 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளில் வறுமை ஒழிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :