மழை தொடரும் : களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைகிறது

0
824
bad weather continue

(bad weather continue)
மழை காலநிலையுடன் வெள்ள நீர் நிலைமை அபாயம் நிலவிய களனி, களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓய, மகா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், கடந்த 9 மணித்தியாலங்களில் நீரேந்தும் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.

அத்தனகலு ஓயவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், நீர்கொழும்பு, கட்டான, ஜாஎல மற்றும் கம்பஹா முதலான பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிய ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதன் சிரேஷ்ட ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு கடும் மழையை எதிர்ப்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :